Archives: மே 2018

ஐக்கியத்தில் ஏற்பட்ட தடங்கல்

உரத்த சத்தமான, வேதனை நிறைந்த குரல் அந்த மதிய வேளையின் இருளைக் கிழித்துக் கொண்டு வந்தது. அது இயேசுவின் பாதத்தினருகில் இருந்த அவருக்கன்பானவர்கள், நண்பர்களின் புலம்பலின் சத்தத்தையும் மேற்கொண்டது. அது, இயேசுவின் அருகில் சிலுவையின் இருபுறமும் இருந்த இரு குற்றவாளிகளின் குமுறலையும் மேற்கொண்டது. அக்குரலைக் கேட்ட யாவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” இயேசு வேதனையில் நம்பிக்கையிழந்தவராய், கொல்கொதா மலை மேல், அவமானத்தின் சின்னமான சிலுவையில் தொங்கியபடி இவ்வாறு கூப்பிடுகின்றார் (மத். 27:45-46).

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கேட்கின்றார். இதனையும் விட வேதனை தரும் வார்த்தைகள் என்ன இருக்கின்றது? நித்திய இராஜ்ஜியத்தில் இயேசுவானவர் தேவனாகிய பிதாவோடு நல்ல ஐக்கியத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்தே இந்த உலகத்தைப் படைத்தனர். இருவரும் சேர்ந்தே மனிதனை தங்களின் சாயலாகப் படைத்தனர். அவர்கள் இருவரும் இரட்சிப்பைக் குறித்து திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த நீண்ட காலங்களில் முற்றிலும் ஐக்கியமாகவேயிருந்தனர்.

இப்பொழுது இயேசு சிலுவையில் வேதனைகளையும் வலியையும் தொடர்ந்து சகித்தார். உலகத்தின் பாவங்களனைத்தும் தன் மீது சுமத்தப்பட்டதால், முதல் முறையாக தேவ பிரசன்னத்தை இழக்கின்றார்.

இதுவே ஒரே வழி. இந்த ஐக்கியத்தில் ஏற்பட்ட இடைவெளி மூலமாகவே நமக்கு இரட்சிப்பு அருளப்பட்டது.  இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்ட அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலேயே மனிதர்களுக்கு தேவனோடுள்ள ஐக்கியம் கிடைத்தது.

இயேசுவே, நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக, மிகவும் அதிக வேதனைகளைச் சிலுவையில் சகித்ததற்காக உமக்கு நன்றி சொல்கின்றோம்.

வார்த்தைகள் தவறாகும்போது

சமீபத்தில் நான் என் மனைவி கேரிக்கு ஒரு குறுஞ்செய்தியை, ஒலி வழிச் செய்தியாக அனுப்பினேன். அவள் வேலையை முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வரும்படி என் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், இந்த வார்த்தைகளை அனுப்பினேன். ‘‘நான் உன்னை எவ்விடத்தில் வந்து அழைத்துச் செல்ல விரும்புகின்றாய், என் வயதான பெண்மணியே?” என்பதே அச்செய்தி.

கேரியை நான் வயதான பெண்மணி என்று அழைப்பதை அவள் பொருட்படுத்துவதில்லை. அது எங்கள் வீட்டிற்குள்ளே நாங்கள் பயன்படுத்தும் புனைப் பெயர்களில் ஒன்று. ஆனால் அது என் அலைபேசிக்குப் புரியவில்லை. எனவே அது ‘‘வயதான மாடு” என்றனுப்பிவிட்டது.

நல்ல வேளையாக கேரி உடனடியாக என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள். அதனை வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவள் என்னுடைய குறுஞ்செய்தியை சமூக வலை தளத்தில் பதித்து விட்டு “நான் இதற்காக வருத்தப்படுவேனோ?” எனவும் கேட்டிருந்தாள். நாங்கள் இருவருமே அதனைக் குறித்து சிரித்துக் கொண்டோம்.

என்னுடைய அவலட்சணமான வார்த்தைகளுக்கு என்னுடைய மனைவியின் அன்பான அணுகுமுறை, அன்று என்னை நம்முடைய ஜெபங்களைக் குறித்து தேவனுடைய புரிந்து கொள்ளலைப் பற்றி எண்ண வைத்தது. நாம் ஜெபிக்கும் போது எவற்றைக் கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியவில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும் போது, நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). அன்போடு நமக்குதவி செய்து நம்முடைய ஆழ்ந்த தேவைகளைத் தேவனிடம் எடுத்துரைக்க உதவுகின்றார்.

நம்முடைய பரம தந்தை ஒருபோதும் தூர நின்று கொண்டு நம்முடைய சரியான வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றவரல்ல. நாம் நம்முடைய தேவைகளோடு அவரிடம் வரலாம். அவர் நம்மைப் புரிந்து கொண்டு அன்போடு அரவணைக்கின்றார் என்ற உறுதியைத் தந்துள்ளார்.

அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிரு

நாங்கள் பயணம் செய்யும் படகு புறப்பட்டதும், என்னுடைய சிறிய மகள் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறினாள். கடல் பயண நோய் அவளைத் தாக்கியது. சிறிது நேரத்தில் எனக்கும் வயிற்றினைப் புரட்டியது. “அந்த அடிவானத்தை கவனித்துப் பார்” என நான் எனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டேன். கடல் மாலுமிகள் தங்களின் உள்ளுணர்வுகளை உற்சாகப்படுத்த இதனைக் கூறுவதுண்டு.

இந்த அடிவானத்தை உருவாக்கியவருக்கு (யோபு 26:10) நாம் நம்முடைய வாழ்வின் சில வேளைகளில் பயத்திலும், அமைதியற்ற நிலையிலும் இருக்கின்றோம் என்பது தெரியும். நாம் நம்முடைய பார்வையை தொலைவிலுள்ள இலக்கிற்கு நேராகத் திருப்புவோமாகில் சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.

எபிரெயரை எழுதியவர் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் தம் எழுத்துக்களை வாசிப்பவர்களிடம் தோன்றும் மனச் சோர்வை கண்டு கொண்டார். துன்புறுத்தப்பட்ட பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். விசுவாசத்திலிருக்கும் வேறு சிலர் மிக அதிகமான சோதனைகளைச் சகிக்கின்றனர். அவர்கள் வீடற்றவர்களாயினர் என எடுத்துக் கூறுகின்றார். அவர்கள் இவற்றையெல்லாம் பொறுமையாகச் சகித்தனர், ஏனெனில் அவர்கள் மேலான ஒன்றை எதிர்பார்த்தனர்.

எனவே வாசகர்கள் இந்த வீடற்ற அகதிகளைப் போல் தேவன் தாமே ஆயத்தம் பண்ணியிருக்கிற நகரத்தை, அந்த பரம தேசத்தில் காணும்படி அதையே வாஞ்சிப்பார்களாக. (எபிரெயர் 11:10 ; 14, 16) தன்னுடைய கடைசி ஆலோசனையாக எழுத்தாளர் தன்னுடைய வாசகர்களை தேவனுடைய வாக்கின்மேல் உறுதியாயிருக்கும்படித் தெரிவிக்கின்றார். “நிலையான நகரம் நமக்கு இங்கேயில்லை. வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்.” (13:14).

இக்கால பாடுகள் நிரந்தரமானவையல்ல. ‘‘இந்த பூமியின் மேல் நாம் அந்நியரும் பரதேசிகளுமாய்” இருக்கின்றோம். (11:13) தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை தூரத்திலே கண்டு அதையே நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்.

கடைசி அழைப்பு

ஹெலிகாப்டர் ஓட்டியாக இருபது ஆண்டுகள் நாட்டிற்குச் சேவை செய்தபின், ஜேம்ஸ் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி, அவனுடைய சமுதாயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினான். ஆனால் அவன் ஹெலிகாப்டர்களை மிகவும் நேசித்தபடியால் அருகிலுள்ள மருத்துவமனையில், மருத்துவ உதவி செய்வதற்காக பயன்படுத்திய ஹெலிகாப்டரை ஓட்டும் வேலையில் சேர்ந்தான். தன்னுடைய வாழ்வில் இறுதிவரை பறப்பதிலேயே செலவிட்டான்.

இப்பொழுது அவனை வழியனுப்ப வேண்டிய வேளை வந்தது. அவனுடைய நண்பர்களும், குடும்பத்தினரும், அவனோடு பணி புரிந்த இராணுவ உடையணிந்த சில வீரரும் ஆயத்தமாகக் கல்லறைத் தோட்டத்தில் நின்றனர். அவனுடைய சக வேலையாள் ஒருவன் ரேடியோவில் கடைசி அழைப்பு கொடுத்தார். உடனே ஒரு ஹெலிகாப்டரின் மின் விசிறியின் சுழலோசை காற்றைக் கிழித்துக் கொண்டு கிளம்பி அந்த நினைவிடத்தின் மேலே வட்டமிட்டது. பின்னர் அது ஓர் இடத்தில் நிலையாக நின்று மரியாதை செலுத்தியது. பின்னர் அது மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றது. அங்கு வந்திருந்த இராணுவ வீரர்களால் கூடத் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சவுல் ராஜாவும், அவனுடைய குமாரன் யோனத்தானும் யுத்தத்தில் கொல்லப்பட்ட போது, தாவீது ஒரு பாடலை எழுதினான். அது வில்லின் புலம்பல் எனப் பட்டது. (2 சாமு. 1:17) “இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று.” “பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்” (வ. 19) என்று பாடினான். யோனத்தான் தாவீதின் உற்ற நண்பனும், மைத்துனனுமாவான். தாவீதும் சவுலும் எதிரிகளாயிருந்த போதும், தாவீது அவர்களிருவரையும் கனம் பண்ணினான். ‘‘சவுலுக்காக அழுது புலம்புங்கள்,” “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன். (வச. 24, 26) என எழுதினான்.

மிகச் சிறந்த விடை பெறல் மிகவும் கடினமானது. ஆனால் தேவன் பேரில் நம்பிக்கையாயிருப்போருக்கு, அந்த நினைவுகள் கசப்பைவிட இனிமையைத் தரும். பிறருக்காக பணி புரிந்தவர்களைக் கனம் பண்ணுவது எத்தனை நன்மையானது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை  பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.

 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5). 

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார். 

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.